Sunday, March 18, 2012

எண்ணெய் வித்துக்களிலிருந்து உயிரி எரிபொருள் அரசு ஊக்கப்படுத்துமா?




நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிக்க இறக்குமதியை மட்டுமே நம்பியிருந்தால் கடுமையான நெருக்கடியை சந்திக்க வேண்டி வரும். ஆகையால் உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என சுற்றுச்சூழல் விஞ்ஞானிகள் வலியுறுத்தி வருகின்றனர்.இந்தியாவின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே, செல்கிறது. நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் சுமார் 70 விழுக்காட்டிற்கு மேல் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை பெருக்கம், நாட்டின் வாகனங்கள் பெருக்கம், அவசியமற்ற ஆடம்பரம் என நாட்டின் எரிபொருள் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியாவில் எரிபொருள் பயன்பாடு சுமார் 63 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது.சர்வதேச எண்ணெய் சந்தையில் ஏற்பட்டு வரும் நிலையற்ற தன்மை, தவறான பொருளாதார கொள்கை காரணமாக எதிர்காலத்தில் எரிபொருள் விஷயத்தில் நம்நாடு நெருக்கடியை சந்திக்க வேண்டிவரும். ஏற்கனவே கச்சா எண்ணெய் மூலம் தயாரிக்கப்படும் பெட்ரோல்-டீசலை உபயோகிப்பதால் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் சுற்றுச்சூழலை மிகவும் பாதிப்பதாக உள்ளது.

இத்தகைய சூழலில் கச்சா எண்ணெய் சார்ந்த எரிபொருளுக்கு மாற்றாக உயிரி எரிபொருளை உற்பத்தி செய்து பயன்படுத்துவதன் மூலம், நாட்டின் எரிபொருள் தேவையை சமாளிப்பதோடு மட்டுமல்லாமல் சுற்றுச் சூழலையும் பாதுகாக்க இயலும். உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் எந்ததெந்த வித்துக்களில் இருந்து பெற முடியும் என்ற ஆராய்ச்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அதில், உணவுக்கு பயன்படாத எண்ணெய் வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு வசதிகள் அதிகமாக இருக்கிறது; ஆனால் அதனை நாம் முழுமையாக பயன்படுத்தவில்லை; கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதமாவது இந்த உணவுக்கு பயன்பாடாத எண்ணெய்வித்துக்களில் இருந்து எடுக்கப்படும் உயிரி எரிபொருள் உற்பத்திக்கு கொடுத்தால், நமக்கான எரிபொருள் தேவையில் கணிசமான பகுதியை நாமே பூர்த்தி செய்து கொள்ள முடியும் என்று கூறுகின்றனர்.குறிப்பாக காட்டாமணக்கு, புன்னை,இலுப்பை, மற்றும் புண்ணை மரங்களில் இருந்து பெறப்படும் எண்ணெய் மூலம் உயிரி எரிபொருள் உற்பத்தி செய்ய இயலும் என்பது வெற்றிகரமாக கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.கச்சா எண்ணெய் மூலம் பெறப்படும் எரிபொருளை விட உயிரி எரிபொருள் எவ்விதத்திலும் குறைந்தது இல்லை என்பதும், குறிப்பாக சுற்றுச்சூழலுக்குஎவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுத்துவதில்லை என்பதும் ஆராய்ச்சியாளர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற நீலகிரி மலை ரயில் இந்த உயிரி எரிபொருள் மூலம் இயக்கப்பட்டு வருகிறது.
உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்கள் என்று கண்டறியப்பட்டுள்ள இந்த மரங்களை வளர்ப்பதற்கு அதிக அளவில் தண்ணீர் தேவையில்லை என்பது கூடுதல் வசதி ஆகும். மேலும் தொடர் கவனிப்பும் தேவைப்படாது. அரசு சரியாக திட்டமிட்டு செயல்படுத்த ஆரம்பித்தால் மிகப்பெரிய பலனை அடைய முடியும். இந்தியாவில் பயனற்ற நிலையில் பல லட்சக்கணக்கான ஹெக்டேர் தரிசு நிலங்கள் இருக்கிறது. அந்த இடங்களில் புங்கன், கட்டாமணக்கு போன்ற எண்ணெய் வித்துக்களை பயிரிட்டு பயன்படுத்த துவங்கலாம். இதன் மூலம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும். கூடுதலாக தரிசு நிலங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர முடியும்.

 இதன் மூலம் சுற்றுச்சூழலையும் பாதுகாக்க முடியும். இதுபற்றி மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் துரைராசு ஐ.எப்.எஸ். யிடம் கேட்டபோது:உணவுக்கு பயன்படாத உயிரி எரிபொருள் உற்பத்திக்கு காட்டாமணக்கு, புங்கன் உள்ளிட்ட 10 மர வித்துக்கள் மூலப்பொருட்களாக உள்ளன.

இந்த மாவித்துகள் உற்பத்தியில் கன்று நடுவது முதல் வளர்த்து பயன்பாட்டிற்கு கொண்டு வருவது வரை உள்ள பிரச்சனைகளை எளிதாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரம் மற்றும் விதைகள் பற்றிய விபரங்களும், அதன் உயர்ந்த பலன் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக கல்லூரி மாணவ- மாணவியருக்கு இது குறித்த சிறப்பு பயிற்சி முகாம்கள் நடத்ததப்படுகிறது. இந்த முகாம்களில் உயிரி எரிபொருளின் அவசியம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, உயிரி எரிபொருளுக்கான முலப்பொருட்கள் தயாரிப்பு முறைகள் விரிவாக விளக்கப்படுகிறது. மேலும் உயிரி எரிசக்தியின் மர வளர்ப்பு பற்றி மரப்பண்ணைகளுக்கு நேரிடையாக அழைத்துச் சென்று அவர்களின் சந்தேகங்களை நீக்குவதோடு, சிறந்த ஆலோசனைகளையும் பெறுகிறோம் என்றார். மின் சக்தியின் உற்பத்தியை எடுத்துக் கொண்டால் நிலக்கரி மூலம், காற்றின் மூலம், நீரின் மூலம், சூரிய ஒளியின் மூலம், அணுசக்தி மூலம் என பல முறைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
பல வகைகளில் தயாரிக்கப்படும் மின்சாரமே இன்றைய காலகட்டத்தில் மிகப் பெரும் பற்றாக்குறையாக நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் தடைப்பட்டு வருகிறது.

 இதே நிலைதான் எரிசக்திக்கும். இறக்குமதியை மட்டுமே நம்பிக் கொண்டு அதிகரித்து வரும் தேவையை கருத்தில் கொள்ளாமல், “ உலக சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்த்துவிட்டது. அதனால் இங்கும்பெட்ரோல் - டீசல் விலையை தாறுமாறாக உயர்த்துவது தவிர்க்க இயலாதது” என விலையை உயர்த்துவதையேகொள்கையாக கொண்டிராமல், உணவுக்கு பயன்படாத எண்ணெய்வித்துக்களில் இருந்து உயிரி எரிபொருள் உற்பத்தி முறையை ஊக்கப்படுத்த அரசு முன்வர வேண்டும். அப்போதுதான் எரிபொருளின் தேவையை ஓரளவு பூர்த்தி செய்தும், சுற்றுச்சூழலையும் பாதுகாத்திட முடியும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

-இரா.சரவணபாபு

Sunday, February 19, 2012

புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி


தானே புயலால் பாதிக்கபட்ட மக்களுக்கு புதுவை அறிவியல் இயக்கத்தின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுச்சேரியில் கடந்த டிசம்பர் 30ஆம்தேதி தானே புயலால் விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் அடங்கிய இடுபொருட்கள், மாணவர்களுக்கு புத்தகபைகள், நோட்டு புத்தகங்கள், பெண்கள் வீட்டு தோட்டத்தில் காய்கறிகள் பயிரிடுவதற்கு விதைகள் மற்றும் இடுபொருட்கள் ஆகியவை  வழங்கும் நிகழ்ச்சி ரெட்டியார்பாளையம், பாகூர், உச்சிமேடு கிராமம் ஆகிய பகுதியில் நடைபெற்றது.

 இந்நிகழ்சியில் அறிவியல் இயக்க பொதுச் செயலாளர் S.சேகர், துனைதலைவர் முனைவர் T. பரசுராமன் நிர்வாகிகள் R. தட்சணாமூர்த்தி, A. ஹேமாவதி, T.P.ரகுநாத், M. சுதர்சனன், P. ரவிச்சந்திரன், R. ரமேஷ், K. விஜயமூர்த்தி, சமம் மகளிர் சுயசார்பு இயக்கத்தின் செயலாளர் டி.சரோஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை வழங்கினார்கள்.

இதேப்போல் கடந்த ஜனவரி மாதத்தில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, சமையல்என்ணெய், போர்வை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டது.மேலும் பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது

Saturday, February 18, 2012

அறிவியல் வானில் பெண் நட்சத்திரங்கள்

 பெண் என்பவர் ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி. குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேராக இருப்பதும் பெண்தான். அதே சமயம், பொது வாழ்க்கையில் ஆண்களோடு இணைந்து பொறியியல், மருத்துவம், கல்வி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தும் வருகின்றனர். தாங்கும் சக்தி அதிகம் தேவைப்படும் மிகக் கடினமான பயிற்சிகள் கொண்ட விண்வெளிப் பயணங்களிலும் கூட அவர்கள் சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்றனர். 1950-களில் அன்றைய சோவியத் யூனியன் விண் வெளியில் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளைச் செலுத்திய பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புது யுகம் பிறந்தது.

 யூரி ககாரின் விண் வெளியில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து சிறிது காலம் ஆனவுடனேயே வாலெண்டினா டெரஸ் கோவா அந்த சாதனையைத் தொடர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு மேலும் பல பெண்கள் விண் வெளியில் பயணிக்க அது ஒரு தொடக்கமாக அமைந்தது. 
 
2011 ஜனவரி நிலவரப்படி 282 விண் வெளிப் பயணங்கள் மூலமாக 520 பேர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தவர்கள். அதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப் பான், கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சென்ற 56 பேர் பெண்கள். 

இந்தியாவிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருப்பது 48 வயதான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண்தான். சென்ற ஆண்டு நவம் பர் 15 அன்று ஒரிஸா கடற்கரையின் பாலசோர் சோதனைத்தளத்திலிருந்து அக்னி - ஐஏ ஏவுகணையை விண்ணில் செலுத்தி அவரும் அவரது குழுவினரும் சாதனை படைத்தனர்.

 3000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அந்த ஏவுகணை பழைய சாதனை களை முறியடித்தது. இந்தியாவின் பிரபலமான பெண் விஞ்ஞானியாக டெஸ்ஸி தாமஸ் கருதப்படுகிறார். ஆனால் அதை வைத்து அறிவியல் துறையில் பெண்களுக்குரிய அங்கீ காரம் கிடைத்துவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. எப்படி ஒரு பிரதிபா பாட்டீலையோ ஒரு மீரா குமாரையோ வைத்து அர சியலில் பெண்களுக்குரிய இடம் கிடைத்து விட்டதாகக் கருதமுடிய தோ அது போன்றதுதான் இது.

பெண் விஞ்ஞானிகளில் மேரி கியூரியைப் பற்றி பலருக்கும் தெரியும். அவர்களுக்குக் கூட அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற வர் என்ற தகவல் தெரியுமாவெனத் தெரியவில்லை. 1963-ல் இயற்பிய லுக்காக நோபல் பரிசு பெற்ற மரியா கோப்பெர்ட்-மேயர், 1964-ல் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற டோரோதி ஹாட்கின்,1986-ல் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரிட்டா லெவி-மாண்டேசினி போன்ற பெண் விஞ்ஞானிகளையோ, பெண் என்ற காரணத்தினா லேயே நோபல் பரிசு பெற வாய்ப் பில்லாமல் போய்விட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (1920-1958), லைஸே மேட்னர் (1878-1968), சியன்-ஷியுங் வு (1912- 1997), ஜோசலின் பெல் பர்னெல் (1943- ) போன்ற பெண் விஞ்ஞானிகளையோ எத்தனை பேருக்குத் தெரியும்?

பல கலாச்சார, சமூகத் தடைகளின் காரணமாக நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கலை, சமூக விஞ்ஞானம் போன்ற மென்மையான துறைகளுக்குத்தான் பெண்கள் ஏற்றவர்கள் என்ற கருத்து இன்னமும் பரவலாக இருக் கிறது. அடிப்படையில் பெண்கள் வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இது ஆண்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பல பெண்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்டுள்ள எல்லையும் அதுதான்.

பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி சமூகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அறிவியல் துறையிலும் சமூகத்தின் பார்வைகள், சமூக நிர்ப்பந்தங்கள், பாலினப் பாகுபாடுகள் போன்ற காரணங்களால் பெண்கள் பிரச்சனை களைச் சந்திக்கின்றனர். மனித வளத்தின் கணிசமான பகுதி சரியான முறையில் பயன்படாமலே வீணாவதை நாம் உணர வேண்டும். சமூகம் பெண்களைப் பார்க்கும் பார்வைகளில் அடிப்படையான மாற்றங்கள் வரவேண்டும். பெண்கள் அறிவியல் துறையில் நியமனம் பெறவும் சாதனைகள் படைக்கவும் உள்ள தடைகளை அகற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.