Thursday, October 31, 2013

மாசில்லா பூமிக்கு சத்தமில்லா தீபாவளி அவசியம்.



நண்பர்களே..

பண்டிகைகள் கொண்டாட்டங்கள் இல்லாத ஒரு தேசத்தைக் கற்பனை செய்து பாருங்கள்.ஒன்றுகூட அகப்படாது. பண்டிகைகளும் கொண்டாட்டங்களும் மனித சமூகம் தேவையின் பொருட்டு, தானே சிருஷ்டித்துக் கொண்டவையே. புராணப் பொய்மைகள் ஜோடிக்கப்பட்ட பின்னர் பண்டிகை தோற்றுவிக்கப்படவில்லை. மாறாக மக்கள் கொண்டாடிய பண்டிகைகளை மதங்கள் ஹைஜாக் செய்து அதற்கு புராண முலாம் பூசின. புனிதம் கற்பிக்கப்பட்டது.

இன்றைக்கும் தீபாவளி கும்பிட்டுவிட்டீர்களா எனக் கேட்பவர்களே அதிகம்.தீபாவளி கொண்டாடினீர்களா எனக் கேட்பவர்கள் மிகமிகச் சொற்பம்.

விழாக்களுக்கு பஞ்சமில்லாத இந்த காலகட்டத்தில் விழாக்கள் நல்லதுக்கா? கெட்டதுக்கா? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டியிருக்கிறது.

வசதியான வீடுகளில் கொண்டாடப்படும் விழாக்கள் பெருமளவில் அவர்களுக்கு உற்சாகத்தையும் புத்துணர்வையும் ஏற்படுத்துவதாக இருக்கின்றன. அதற்காக செய்யப்படும் சில ஏற்பாடுகள்தான் அவர்களுக்கு புதிதாக இருக்கும்.

ஏழ்மையான குடும்பங்களிலோ நிலைமை வேறு.. அந்த ஒரு நாள் மகிழ்ச்சிக்காக மாடாய் உழைப்பது, கடனை வாங்கிக் கொண்டாடுவது என சிக்கிச் சீரழிந்து மற்ற நாட்களின் மகிழ்ச்சியையும் சேர்த்துத்தொலைக்கும் கொடுமை! இதைப்பற்றி மேலும் விரிவாக நீங்களும் உங்கள் நண்பர்களும் விவாதித்துக் கொள்ளுங்கள்!

விழாக்கள் கொண்டாடுவதற்கு பல நேர்மறையான காரணங்கள் இருக்கின்றன. ஆனாலும் நமது கொண்டாட்ட முறைகள் இருக்கின்றனவே.. ஒவ்வொரு விழாக்களின்போதும் நாம் அதை முறைப்படுத்த வேண்டியிருக்கிறது. ஏனென்றால் நாம் சொல்லிக்கொள்வது போல 'அந்த ஒருநாள்' ஏற்படுத்தும் விளைவுகள் அன்றோடு போவதில்லை!

மகிழ்ச்சி என்ற பெயரில் நீங்கள் கொண்டாடிவிட்டுப் போய்விடுவீர்கள், தண்டனைகள் அனுபவிக்கப் போவது அடுத்த தலைமுறைக் குழந்தைகளும் அல்லவா?

எனவே நாம் இப்போது தீபாவளிக்காய்ச்சலில் இருப்பதால் அதுபற்றிச் சிந்திப்பது நல்லது.

"உனக்கு மகிழ்ச்சி தருவதெல்லாம் எனக்கும் மகிழ்ச்சியைத்தரும் என் சின்னஞ்சிறிய மகனே,ஆனாலும் வெடித்துச்சிதறும் வேட்டுக்களிலும்,சீறி ஒளிப்பிழம்பாகும் மத்தாப்புகளிலும் உன்னைப்போல் சில சிவகாசிச்சிறுசுகளின்,சிதைந்த கனவுகளும் சிறைப்பட்ட வாழ்வுமே தெரிவதனால்,வேட்டுக்களும் மத்தாப்புக்களும் வேண்டாம் மகனே"  பேனா மனோகரன். அவர்களின் கவிதையும் நினைத்து பார்க்க வேண்டிய தருனம் இது

நமது இன்றைய சமூகமானது தனித்தனிக் கட்டிடங்களாகவும் தனித்தனிக் கட்டிடங்கள் தனித்தனிக் குடும்பங்களாகவும் தனித்தனிக் குடும்பங்கள் தனித்தனி மனிதர்களாகவும் ஒரு ஆளுமையின் இருப்பு என்பது அனாதையாகிக் கொண்டே இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் சமூகக்கொண்டாட்டங்கள் பற்றி நாமெல்லாம் சிந்திக்கவும் விவாதிக்கவும் வேண்டியிருக்கிறது.

சமூகக் கொண்டாட்டங்கள் மூலம் ஒத்த கருத்துடைய/ ஒரே கட்டிடத்தில்/ஒரே பகுதியில் வாழக்கூடிய அல்லது சொந்த பந்தங்கள் அனைவரும் ஒன்றாகக்கூடி ஒரே இடத்தில் கொண்டாடமுடியும். இதனால் தனித்தனி ஏற்பாடுகள் தேவையில்லை. காணுமிடமெல்லாம் குப்பைகள் நிறையும் நிலையில்லை. குறிப்பிட்ட நேரம், ஒரே இடம் என்பதால் தேவையற்ற இரைச்சல், அலைச்சல், குழப்பங்கள் இல்லை. சிறப்பாக சூழல் மேலாண்மை செய்யமுடியும். மிகமுக்கியமாக எரிபொருள்/ஆற்றல் சிக்கனம். இதற்காக பள்ளி,கல்லூரிகள், விடுதிகள்,மருத்துவமனைகள் ஆகிய இடங்களிலிருந்து தூரமாய் உள்ள திறந்தவெளி மைதானங்களைத் தேர்வுசெய்வது நல்லது.

*தனியாகக் கொண்டாடுவதை இனியேனும் தவிர்ப்போம்!
*வெடி வெடிப்பதால், வெளிவரும் புகையால் பொதுமக்களுக்கு தேவையற்ற மன உளைச்சல், தலைவலி, சுவாசக்கோளாறு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் தோல் வியாதிகள் போன்றவற்றைத் தவிர்ப்போம்.

மேலும் அளவுக்கதிகமான நில மாசு காற்று மாசு ஒலி மாசு போன்றவற்றைத் தவிர்ப்போம்.

தேவையற்ற மின்நுகர்வைத் தவிர்ப்போம்

விளக்கெண்ணையைக் கண்டுபிடித்தவன் அதை சந்தோஷமாகப் பகிர்ந்துகொண்டு கொண்டாடிய நாளே தீபாவளி என்பார் அயோத்திதாசப் பண்டிதர். சமூக அறிவியல் ரீதியாக பண்டிகைகள் குறித்த ஆய்வும் புரிதலும் தேவைப்படுகிறது.மனிதநேயத்தையும் மகிழ்ச்சியையும் மேன்மைப்படுத்தும் பண்டிகைகள் மட்டுமே சடங்குத்தனமான இன்றையப் பண்டிகைகளை அப்புறப்படுத்தும்.

அது ஒற்றை நாளில் ஒற்றை அறிவிப்பில் வந்துவிடாது.இப்போதே அதற்கு முயற்சியைத் துவங்கினால் காலகதியில் அவை மக்கள் பண்டிகையாக முகிழ்க்கும்.

தீப ஒளி ஏற்றுவோம்.

*விழாக்களின் வடிவங்களை மாற்றுவோம்.
*தொடர்ந்து சிந்திப்போம்! பகிர்ந்து கொள்வோம்! செயல்படுவோம்!
*இது குறித்த உரையாடலைத் தொடங்குவோமே!

Sunday, September 22, 2013

வருது வருது ஐசோன் வால் நட்சத்திரம் !

நவம்பர் மாதத்தில் நமக்கு மிகவும் பிடித்த வானவேடிக்கை பண்டிகையான தீபாவளி வருவது தெரியும். அதே மாதம் வானில் இன்னொரு விஷயம் நடக்கப்போகிறது. 'ஐசோன்’ எனப்படும் வால்நட்சத்திரம் பூமியை நோக்கி வரப்போகிறது.
அச்சமூட்டும் வால்மீன்!
'வால்மீன்’ எனப்படும் வால்நட்சத்திரம் வந்தால், நாட்டுக்கு கெட்டது நடக்கும் என்ற நம்பிக்கை உலக மக்களிடம் பழங்காலம் தொட்டே உள்ளது. 1910, மே 19-ல் வந்த 'ஹாலி வால்மீன்’ பூமிக்கு மிக அருகில் தெரிவதாக இருந்தது. அதன் வாலிலிருந்து நச்சு வாயு வீசப்படும் என்றும் சொல்லப்பட்டது. அதனால், பயந்துபோன மக்கள் சிலர் அதற்கு எதிரான மருந்துகள் உட்கொண்டார்கள். வீட்டுக் கதவுகளையும் ஜன்னல்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டார்கள். ஒரு சிலரோ அதற்குப் பயந்து தற்கொலையும் செய்துகொண்டனர். ஆனால், அந்த ஹாலி வால்மீன் சாதுவாக வந்து, அமைதியாகப் போய்விட்டது.
யார் இந்த வால்மீன்?
பொதுவாகவே வால்மீன் ரொம்ப சாதுவானதுதான். இதன் உள்பகுதி துளித்துளி மில்லிமீட்டர் அளவே உள்ள தூசுத் துணுக்குகளால் ஆனது. அதனைச் சுற்றி பனிக்கட்டி அடுக்குகள். அத்துடன் கரியமில வாயு, மீத்தேன் மற்றும் அம்மோனியாவும் இருக்கும். இதில் பாறை, வாயுக்கள், பனிக்கட்டியும் இணைந்த உட்கரு இருக்கும். வால்மீன்கள் வான்வெளியில், இரண்டு இடங்களிலிருந்து உருவாகின்றன. ஒன்று, நம் சூரிய மண்டலக் கோள்களைத் தாண்டி உள்ள 'குய்ப்பர் வளையம்’ (Kuiper Belt).அடுத்து, சூரிய மண்டலத்தின் தொலைதூரக் கடைக்கோடி எல்லையில் உள்ள 'ஊர்ட் மேகங்கள்’ (Oort clouds).ஒரு வால்மீன் என்பது  குய்ப்பர் வளையம் அல்லது  ஊர்ட் மேகத்தில் பல கோடி ஆண்டுகள் தங்கி வாழ்ந்த பின்னரே, அங்கிருந்து கோள்களை நோக்கி ஓடிவரும். அதுவும் சூடான சூரிய மண்டலத்தின் உள் வட்டத்துக்குள் வந்தபின்னரே, வால்மீனுக்கு வால் முளைக்கும். அப்போதுதான் அது பிரகாசமாவும் தெரியும்.
பழங்கால கருத்துகளும், உண்மையும் !
பழங்காலத்தில் வால்மீன்கள் சூரியக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற உண்மை யாருக்கும் தெரியாது. நம் முன்னோர்கள் வால்மீனையும் அதன் வாலையும் பார்த்தும்கூட அது ஒரு விண்மீன்தான் என்று நம்பினர். வால்மீன் பூமியின் வளிமண்டலத்தில் பயணிக்கிறது என்றும் பல நூறு ஆண்டுகளாக  நினைத்தனர். டேனிஷ் நாட்டு வானவியலாளர் டிகோ ப்ராசே (Tycho Brache) என்பவரே, 'வால்மீன்கள் என்பவை சந்திரனையும் தாண்டி வலம் வருகின்றன’ என்ற உண்மையை, முதன் முதலில் கி.பி.1577-ல் கண்டறிந்தார். வால்மீன், கோள்கள் போலவே சூரியனைச் சுற்றி வரும். ஆனால், அது தன் இஷ்டம் போல ஒருசில ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்து சுற்றிவிட்டுப் போகும். சில வால்மீன்கள் 20,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சில வால்மீன்கள் 60,000 ஆண்டுகளுக்கு ஒருமுறையும்கூட வருவது உண்டு. சில வால்மீன்கள் தன் வாழ்நாளில் ஒரே ஒருமுறை மட்டும் வந்து, சூரியனைச் சுற்றிவிட்டு ஓடிவிடும். மீண்டும் வரவே வராது. இப்படி ஓர் ஆண்டில் சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம்! அது நம்மை, இந்த உலகை எதுவும் செய்யாது. 2013, ஜூலை வரை 4,894 வால்மீன்கள் கண்டறியப்பட்டு பதிவும் செய்யப்பட்டுள்ளன.
புதிய விருந்தாளி!
நாம் இப்போது, நவம்பரில் வரவுள்ள புதிய விருந்தாளி ஐசோன் கதைக்கு வருவோம். மற்ற வால்மீன்கள் போலவேதான் ஐசோனும். ஆனால், ஐசோன் வால்மீன், இதுவரை வந்த வால்மீன்களில் மிகப் பெரியதும், மிகவும் பிரகாசமானதும்கூட.
இந்த ஐசோனின் வயது என்ன தெரியுமா? இது, சூரியனுக்கு முன்னே பிறந்ததாம். இதன் வயது சூரியனைவிட அதிகம் என்கின்றனர். அதாவது, 470 கோடி ஆண்டுகள். அப்போது உருவான அந்த வால்மீன் இப்போதுதான், நம்மை முதல் முறையாகப் பார்க்க வருகிறது. இது மிக மிகப் பெரிது. இதன் வாலின் நீளம், 3,00,000 கி.மீ., அகலம், 5 கி.மீ.
நவம்பர் 22 அன்று, சூரியனுக்கு மிக அருகில் 1.16 மில்லியன் கி.மீ. தொலைவில் வந்து, சூரியனின் ஒளியுடன் போட்டியிடப் போகிறது. 2013, நவம்பர் 28-ம் நாள், பூமிக்கு மிக அருகில் வருமாம். இதனைத் தொலைநோக்கி மட்டுமின்றி வெறும் கண்களாலும் பார்க்கலாம். உலகில் அனைத்துப் பகுதியினரும் பார்க்கக்கூடிய வால்மீன் இதுதான்.
ஐசோனை மேளதாளத்துடன் வரவேற்போம்!
இதற்கான புதுச்சேரி மாநில அளவிலான பயிற்சி பட்டரை வரும் அக்டோபர் மாதம் 9,10தேதிகளில் நடைபெற இருக்கிறது.
நன்றி பேரா சோ.மோகனா ஆ.முத்துக்குமார்

Friday, August 23, 2013

ஐசோன் வால்நட்சத்திரம் வருது பார்க்க தயாரா இருங்க


ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ திலக, ராஜ பாராக்கிரம ,ராஜ ஒளிவீச நம் இந்த நூற்றாண்டின், மிகப் பெரிய அதிசய மான, அற்புதமான, நிலவை ஒளியையே விழுங்கி ஏப்பம் விடும் தன்மையுள்ள ஒரு பெரிய ஒளி மிகுந்த வால்நட்சத்திரம் இந்த 2013,நவம்பர்-டிசம்பரில் வருகிறார், பராக், பராக் ..பராக் 


பொதுவாக வானில் வலம் வரும் ஒரு வால்மீன்/வால்நட்சத்திரத்தின் வருகையை காலம் காலமாகவே ஒரு கெ ட்ட சகுனமாகவே கருதி வரும் சமூகம் இது. ஆனால் பாவம் இந்த இந்த வால் நட்சத்திரம் அப்படி எதுவும் எந்த கெட்ட செயலையும் செய்வதில்லை. ஆனால் கெட்ட பேர் மட்டும் வாங்கிவிட்டது.பொதுவாக வால்மீன் என்பது சூரியனுக்கு அருகில் சுற்றி வரும் ஒரு பணிக்கட்டியால் ஆனா ஒரு பொருள் அவ்வளவே. அது சூரியனை இஷ்டம் போலவே ஒரு சில ஆண்டுகளுக்கு ஒரு முறை வந்து சுற்றி விட்டுப் போகும். சில வால்மீன்கள் 20-200 ஆண்ட்குகளுக்கு ஒரு முறை கூட வருவது உண்டு. சில வால்மீன்கள் தன வாழ்நாளில் ஒரே ஒரு முறை மட்டும் வந்து சூரியனை சுற்றி விட்டு ஓடியே போய்விடும். மீண்டும் வரவே வராது.இப்படி ஓர் ஆண்டில் சூரியனை ஆலவட்டம் போடும் வால்மீன்கள் ஏராளம் ஏராளம். 

இந்த வால்மீன்களுக்கு ஒரு உட்கருவ்வும், ஒரூ வாலும் இருக்கும். கொஞ்சம் சேட்டைக்கார வால்மீன்களுக்கு /இரண்டு வால்களும் உண்டு. ஆனா இப்ப இன்னும் மூணு மாசத்துலே வரப்போற வால்மீன் ரொம்ப ரொம்ப பெரிசாம். வாலின் நீளம், ஒரு சில மீட்டரிலிருந்து, பல கிலோ மீட்டர் நீளம் வரை கூட இருப்பதுண்டு. அனைத்தும் பனிக்கட்டியால் ஆனவை; . ஆதிகாலத்தில் ஒவ்வொரு நாகரிகத்திலும், வால்மீன்கள் வந்து போன பதிவை குறிப்பிட்டு வைத்துள்ளார்கள. ஏ சு கிறிஸ்து பிறந்த போ து கூட ஒரு வால்மீன் தோன்றியதாக தகவல் பதிவு செய்யப்பட்டுஅது. 

நவம்பர் மாதம் வரப்போகிற ஹீரோ வான்மீனை கடந்த ஆண்டு செப்டம்பர் 21ம் நாள்தான் ஓர் அமெச்சூர் வானவியலாளரான, வைட்டாலி நெவ்ஸ்கி மற்றும் அர்த்யோன் நோவிசொநோக் (Vitali Nevski and Artyom Novichonok ) கண்டுபிடித்தனர். அந்த வால்மீனைப் பார்க்க பயன்படுத்திய கருவியின் பெயரைக் கொண்டே அதற்கு 
ஐசோன் ((ISON) )என்று பெயரிட்டுள்ளனர் the International Scientific Optical Network (ISON) என்பதன் கருகிய பெயர்தான் இஸ்கான். இதனை ரஷ்யாவிற்கு அருகில் கிஸ்லோவோட்ச்க் (near Kislovodsk, Russia.)என்ற இடத்தில் கண்டறிந்தனர். 

இந்த ஐசோன் வால்மீன் 2013, நவம்பர் 28 ம் நாள் , பூமிக்கு மிக அருகில் வருமாம். அதாவது சூரியனின் மையப்புள்ளியிலிரு ந்து சுமார் 1,800,000 km; தொலைவில் ( 0.012 AU வானியல் அலகில் ) வலம் வருமாம். ஊர்த் மேகத்திலிருந்து புறப்பட்டு வரும் புது வரவாம் இது. அக்டோபர் முதல் நாள் செவ்வாய்க்கு அருகிலும், டிசம்பர் 27 ல் பூமிக்கு அருகிலு ம் வரும். அதுவும் பூமி அதனுடைய சுற்றுவட்ட த்திற்கு மிக அருகில் 2014, ஜனவரி 12-14 நாட்களில் இருக்கும். 2014 ஜனவரியில் இதனை வெறும் கண்களால் பார்க்க முடியும். 

நவம்பர் நெருங்க நெருங்க ஐசோ ன் மிகப் பிரகாசமாய் தெரியும். எப்படி இருக்கும் தெரியுமா? முழு நிலவின் ஒளியையும், வெளிச்சத்தையும் கூட இந்த ஐசோனின் ஒளி விழுங்கி ஏப்பம் விட்டு விடுமாம். இந்த நூற்றாண்டில் வரும் மிகா பிரகாசமான வால்மீன் ஐசோன் ,மட்டுமே. மறந்துடாம எல்லாரும் இந்த வால்மீனைப் பாருங்கப்பா.. உங்க பிள்ளை குட்டிகளுக்கும் காட்டுங்கள். அது வர்ற ஒரு பத்து நாள் மின்னாடி பாக்கி விஷயம் பேசுவோம். 

பேரா.சோ.மோகனா

Wednesday, July 31, 2013

உலக தாய்ப்பால் வாரம் 2013


தாய்ப்பாலின் அவசியம்: 

WHO, UNICEF, WABA (World Alliance for Breastfeeding Action), IBFAN (International Baby Food Action Network போன்ற அமைப்புகள் சர்வதேச அளவில் தாய்ப்பால் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வுக் காக பல பணிகளைச் செய்து வருகின்றன. 

இந்தியாவில் இதற்கெனவே ஒரு அமைப்பு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகின்றது. அதுதான் BPNI (Breastfeeding Promotion Network of India) இந்த அமைப்பு உலக தாய்ப்பால் வார நிகழ்வை 1992 முதல்இந்தியாவில் ஒருங்கிணைத்து வருகிறது.

தாய்ப்பால் தருவது, தாயின் உடல்நலனுக்கும் உகந்தது. குழந்தை பிறந்த முதல் அரை மணி நேரத்துக்குள் தாய்ப்பால் கொடுக்க தொடங்க வேண்டும். முதல் முறை கொடுக்கப்படும் பால், குழந்தை யின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்படுகிறது. குழந்தைக்கு தேவையான புரதங்கள் இதில் அடங்கியுள்ளன. குழந்தை பிறந்தது முதல், ஆறு மாதம் வரை கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் எனவும், குழந்தையின் உடல்நிலையை பொறுத்து 2 வயது வரை தாய்ப்பால் வழங்க வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனமும் வலியுறுத்துகிறது. 

முழுமையான தாய்ப்பால் வழங்குவதன் மூலம் உலகம் முழுவதும் 1.5 மில்லியன் குழந்தை மரணங்களைத் தவிர்க்க முடியும் (யுனிசெப்). தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம். குழந்தை மரணங்களும் தாய்ப்பால் தருவதால் தவிர்க்கப்படுகிறது. ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது அவசியம். குழந்தைக் கும்,தாய்க்கும் இடையேயான பிணைப்பு தாய்ப்பால் தருவதன் மூலம் அதிகரிக்கிறது. 

பாலூட்டும் தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோயின் ஆபத்து 50 % குறைகிறது. சரியான தாய்ப்பால் பெற்ற குழந்தை களின் நுண்ணறிவு பிற குழந்தைகளை விடவும் 8 புள்ளிகள் அதிகமெனவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இது தவிர நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகளும் சில புள்ளி விபரங்களும் இருக்கின்றன. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஐந்து வயதிற்குட்பட்ட சுமார் 6.9 மில்லியன் குழந்தைகள் இறக்கின்றனர். நாளொன்றுக்கு சுமார் 14000 குழந்தைகள் இறந்து கொண்டுதான் இருக்கின்றனர். சரியான முறையில் தாய்ப்பாலூட்டு வதன் மூலம் 8,30,000 குழந்தை இறப்புகளைத் தடுக்க முடியும். குழந்தை பிறந்த 1 மணி நேரத்தில் பாலூட்டுவதன் மூலம் 22% இறப்புகளையும் 24 மணி நேரத்திற்குள் பாலூட்டுவதன் மூலம் 16% இறப்புகளையும் தவிர்க்க இயலும்.

குழந்தை பிறந்தவுடன் 1 முறை பாலூட்டுவதும் 1 நாள் கழித்து 3 முறை பாலூட்டுவதும் சமமே. 6 மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகள் நிமோனியாவில் இறப்பதற்கு 15 மடங்கும், வயிற்றுப் போக்கால் இறப்பதற்கு 11 மடங்கும் வாய்ப்புள்ளதாகவும் ஆய்வுகள் தெரிவிக் கின்றன. உலகில் 93 பில்லியன்/ மூன்றில் இரண்டு மடங்கு குழந்தை களுக்கு 6 மாதங்களுக்குள்ளாகவே தாய்ப்பால் தவிர்த்த செயற்கை உணவுகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கான பால் வர்த்தகம் மட்டுமே உலக அளவில் 25 பில்லியன் டாலர் அளவிற்கு நடைபெறுகிறது. 

குழந்தை உணவுப்பொருள் தயாரிப்பு தொழில் வளர்ச்சியில் 31% இலக்கு நிர்ணயித்துள்ளனர். அவர்களின் முக்கிய வியாபாரச் சந்தையாக / இலக்காக இருப்பது நமது ஆசியக் கண்டமே.

தாய்ப்பால் வாரம்:

WABA அமைப்புதான் சர்வதேச அளவில் இந்த தாய்ப்பால் வாரம் நிகழ்வை ஒருங்கிணைக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மையக்கருத்து வலியுறுத்தப்படுகிறது. இந்த ஆண்டிற்கான மையக் கருத்தாக தாய்ப்பாலுக்கு ஆதரவு: அன்னையருக்கு நெருக்கமாக. Breastfeeding Support: Closed to Mothers) என அறிவிக்கப் பட்டுள்ளது. இந்நிகழ்வை அனுசரிப்பதற்கான காரணங்கள் ஐந்து. 1. தாய்ப்பால் விழிப்புணர்வு குறித்த கவனத்தை ஈர்ப்பது 2. பேறுகாலப் பெண்களுக்கு அனுபவ தாய்மார்களின் ஆலோசனைகளின் முக்கியத்துவத்தை உணர்த்துவது. பேறுகால பெண்களுக்கான ஆலோசனை முகாம்களை நடத்துவது. 3. தாய்ப்பால் ஆதரிப்போரை பயிற்சிகள் மூலம் மேம்படுத்துவது 4. பேறுகால பெண்களுக்கு ஆதர வாக உள்ளூர் சமூக ஆதரவைத் திரட்டுவது 5. பேறுகாலப் பெண்கள் மற்றும் குழந்தைகளைப் பாதுகாக்க சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ள 10 படிநிலைகளைப் பின்பற்ற அரசுகளை வலியுறுத்துவது. முழுமையாக தாய்ப்பால் வழங்குவோர் சராசரியை உயர்த்தவும் அரசுகளை வலியுறுத்துவது.

உலக சுகாதார நிறுவனம் & யுனிசெப் தாய்ப்பால் ஆதரவு, விழிப்புணர்வுக்காக அறிவித்துள்ள பத்து படிநிலைகள்:

1. தாய்ப்பாலின் முக்கியத்துவத்தை எழுத்துப்பூர்வமான தகவல றிக்கைகளின் மூலமாக அனைத்து சுகாதாரப் பணியாளர்களும் தொடர்ந்து நினைவூட்டப்பட வேண்டும்.

2. தாய்ப்பால் ஊட்டச்செய்வதற்கான பணிகளைச் செய்வதற்கான முறையான பயிற்சி சுகாதாரப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டும்.

3. அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் தாய்ப்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைக்க வேண்டும்.

4. பிரசவம் நிகழ்ந்த அரை மணிநேரத்திற்குள் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டத் தொடங்கிட உதவ வேண்டும்.

5. குழந்தையிடமிருந்து தனித்திருந்தாலும் தாய்மார்களுக்கு பாலூட்டலுக்கான பயிற்சியளித்தல் வேண்டும்.

6. மருத்துவ உதவிக்காக மட்டும் அன்றி வேறெவ்வித காரணத் திற்காகவும் குழந்தைக்கு தாய்ப்பால் தவிர்த்த திட> திரவ உணவுகளைக் கொடுக்கக் கூடாது.

7. தாயும் சேயும் ஒன்றாக இருக்க செய்தல் வேண்டும்.

8. தேவைக்கேற்ப தாய்ப்பாலூட்ட ஊக்குவிக்க வேண்டும் 

9. பால் பாட்டில்கள் தடை செய்வது

10. தாய்ப்பால் ஆதரவு குழுக்கள் அமைத்து மருத்துவமனை, கிளினிக்-ல் இருந்து சென்ற பின்பும் தாய்மார்களுக்கு ஆலோசனை, ஆதரவு அளித்திட வேண்டும்.

மேலும் பேறுகாலப் பெண்கள் குழந்தைகளுக்கு முழுமையாக தாய்ப்பாலூட்ட ஐந்து புறச்சூழல் ஆதரவு தேவை எனவும் றுஹக்ஷஹ அமைப்பு வலியுறுத்துகிறது. அதாவது 1. குடும்ப, சமூக ஆதரவு, 2. பணியிடம், சுற்றுச்சூழல் 3. அவசரகாலச்சூழலிலும் உரிய ஏற்பாடுகள் (உம்.உத்தரகாண்ட் வெள்ளப்பாதிப்பு போன்ற பேரழிவு நேரங்களில் கூட) 4. சுகாதார நிலைமை 5.அரசுத்தரப்பு (ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, சட்ட திட்டங்கள் வகுப்பதில்)
தாய்ப்பால் வழங்குவதில் என்ன பிரச்சினை?:
தாய்ப்பால் வழங்குவதை அப்பெண்ணின் சமூக, பண்பாடு,கலாச்சார, பொருளாதார,கல்விப் பின்புலங்களும் தீர்மானிக்கின்றன என்பதை பல்வேறு ஆய்வுகளும் கூறுகின்றன. முக்கியமாக எங்கும் எதிலும் லாபம் ஒன்றே குறியெனத் திரியும் பன்னாட்டு, உள்நாட்டு
பகாசுரக் கம்பெனிகளின் அநியாயம் தாங்கமுடியாத அநியாயமாக இருக்கிறது. தாய்ப்பாலை, தாய்-சேய் பாசத்தை, குழந்தை வளர்ப்பை மூலதனமாகக் கொண்டு பல்வேறு கம்பெனிகள் தமது தயாரிப்பு களைச் சந்தைக்கு கொண்டு வருகின்றன. தாய்ப்பால் தனியுண வாக குறைந்த பட்சம் 6 மாதங்கள் வழங்குவதில் கூட உலக அளவில் திருப்திகரமான சராசரி நிலையை அடைய முடியாததற்கு இந்தக் கம்பெனிகளின் வியாபார தில்லுமுல்லுகளும் தந்திரங்களுமே பெருங்காரணமாய் இருக்கின்றன.
இவர்களைக் கட்டுப்படுத்தவே IBFAN என்ற அமைப்பின் முயற்சியால் உலக சுகாதார நிறூவனம், யுனிசெப் ஆகியவை 1981ல் பால்துணைப்பொருட்கள், சந்தைப்படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளை (International Code of Marketing Breastmilk Substitute) வகுத்துள்ளன.

பால் துணைப்பொருட்கள், பால் பாட்டில்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை முன்னெடுத்துச் செல்லும் பொருட்டு விளம்பரங்கள் செய்வது, பொருட்களை பிரபலப் படுத்தும் பொருட்டு பரிசாகத் தருவது, சாம்பிள்-ஆகத் தருவது,இதற்காக மருத்துவமனை மற்றும் சுகாதார கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள், பணியாளர்களைப் பயன்படுத்துவது, பொருட்களில் குழந்தையுடன் கூடிய தாய்மார்களின் படங்களைப் பயன்படுத் துவது, தாய்ப்பாலின் மகத்துவத்தைக் குறைக்கும் வகையில் வாசகங் களை அச்சிடுவது, சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகளைக் “கவனிப்பது”, நன்கொடை வழங்குவது, கல்வி சார்ந்த பிற செயல்பாடுகளுக்கான அச்சு, காட்சி ஊடகங் களை நேரடியாக அல்லது மறைமுகமாகப் பயன்படுத்துவது, மருத்து வர்களுக்கு சன்மானம் கொடுப்பது, அவர்களின் உயர்கல்வி, ஆராய்ச்சிகளுக்கு நிதியுதவி செய்வது ஆகியவை தடைசெய்யப் படுகின்றன.

சரி இந்தியாவின் நிலைமை?

IBFAN- (ஆசியா) அமைப்பால் தாய்ப்பால் வழங்குவதில் உள்ள முன்னேற்றம், கொள்கை ரீதியான பிரச்சினைகள், கள நிலைமைகளை ஆசிய அளவில் 50 நாடுகளில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆய்வு செய்யப்படுகிறது. 2012-ல் வெளியான WBTI (World Breastfeeding Trends Initiative) அறிக்கை நம் தாய்த் திரு நாட்டைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்ப்போம்.. 15 அம்சங் களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், இந்தியாவில் இருக்கின்ற மருத்துவ உட்கட்டமைப்பு வசதிகளைத் திறம்பட ஒருங்கிணைப்பதில் பின்னடைவு, IYCF (Infant and Young Child Feeding) குறித்த தேசிய வழிகாட்டு நெறிமுறைகளை கீழ்மட்ட அளவுகளில் கொண்டுசெல்வதில் பின்னடைவு, உருவாக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளும் ஒதுக்கப்படுகின்ற நிதி அளவினைக் கருத்தில் கொள்ளவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

குழந்தைகளுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதற்கான சர்வதேச பத்து படிநிலைகளை நடைமுறைப்படுத்துவதில் போதிய அக்கறை காட்டவில்லை. BFH (Baby Friendly Hospital) அமைப்பை உருவாக்குவதில் 2005 முதல் எவ்விதத்திலும் முன்னேற்றம் காணப் படவில்லை. (உலக அளவில் 156 நாடுகளில் 20,000 மருத்துவ மனைகள் மட்டுமே. BFH அமைப்பை 82 சதவீதம் மகப்பேறு மருத்துவமனைகளில் நிறுவிய உலகின் முதல் மாநிலமாக கேரளா (இந்தியா) வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. ஆனாலும் தற்போதும் இந்தியாவில் 10 சதவீதம் மருத்துவமனைகள் தான். கியூபாவில் 87 சதவீதம், சீனாவில் ஊரகப்பகுதிகளில் 68ரூ நகர்ப்பகுதிகளில் 48 சதவீதம் என 6000 மருத்துவமனைகள்- UNICEF & StC)

IMS -2003 சட்டத்தை முழுமையாக, வலுவாக கொண்டு செல்ல தேவையான கட்டமைப்புகளை உருவாக்கவில்லை. சட்டத்தை மீறு பவர்கள் குறித்த நடவடிக்கை எடுக்க மாவட்ட, மாநில அளவுகளில் வலுவான ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. சட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதைக் கண்காணிக்க பயிற்சி பெற்ற உரிய அலுவலர்கள் இல்லை.இச்சட்டம் குறித்து மக்களிடையே மிகமிகக் குறைந்த அளவே விழிப்புணர்வு உள்ளது. ((WBTI)
(இந்தியாவில் இளம்குழந்தைகளுக்கான பால் துணைப் (பதிலி) பொருட்கள், உணவு மற்றும் பால்பாட்டில்கள் தயாரிப்பு, விநியோக ஒழுங்குமுறைச்சட்டம் (IMS ACT-1993) கொண்டு வரப்பட்டது. 2003ல் அச்சட்டத்திற்கு (-Infant Milk Substitute, Feeding Bottles and Infant Foods (Regulation of Production, Supply and Distribution) Amendment Act, 2003) வலுகூட்டும் பொருட்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் மற்றும் இளம்தாய்மார்களை குறிவைத்து செய்யப்படும் நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்கள் தடை செய்யப் பட்டன.

பிறந்த 6 மாதங்களுக்குள் பகுதியாகவோ, முழுமையாகவோ தாய்ப்பாலுக்கு மாற்றாக முன்வைக்கப்படும் பால் துணைபொருட்கள்
(Lactogen-1, Lactogen-2, Nestogen-1, Nestogen2, Lactodex- 1, Lactodex - 2, Amul Spray, Zerolac, Dexolac, ProSoyal , Simyl-MCT, Similac Neosure போன்றவை), பால் பாட்டில்கள்: Bonny Baby, Hello Baby, Wipro போன்ற அனைத்து வகைக் கம்பெனிகளின் தயாரிப்புகளும்... உணவுகள்: 6 மாதம் முதல் 2 வயது வரையிலான குழந்தை களுக்கான உணவுகளாக முன்வைக்கப்படும் Nestum,Cerelac, Farex, Weano, Veelac, Infacare, First Food, Dexrice, Easum, Junior Horlicks, Growing up milk, health drinks போன்றவையும் இச் சட்ட வரையறைக்குள் வருகின்றன. பால்துணைப்பொருட்கள் சந்தைப் படுத்துதலுக்கான சர்வதேச விதிமுறைகளுள் ((International Code of Marketing Breastmilk Substitute) பல சரத்துகள் இச்சட்டத்திலும் பிரதிபலிக்கின்றன.)
மருத்துவர்கள், செவிலியர்களுக்கு பணிமுன் பயிற்சி போது மானதாக இல்லை. அங்கன்வாடி, ANM, ASHA பணியாளர்களுக் கான பயிற்சியில் IYCF குறித்த கருத்துகள் இடம்பெறவே இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

நமது இந்தியாவில் ஆண்டுதோறும் 26 மில்லியன் குழந்தைகள் பிறக்கின்றனர் (NFHS -3). அதில் 25 சதவீதம் குழந்தைகளுக்கு மட்டுமே பிறந்த 1 மணி நேரத்தில் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 20 மில்லியன் குழந்தைகளுக்கு முதல் ஆறு மாதங்களுக்கு மட்டும் கூட முழுமையாக தாய்ப்பால் உணவு கிடைப்பதில்லை. 13 மில்லியன் குழந்தைகளுக்கு 6-9 மாதங்களில் தாய்ப்பாலுடன் சரியான இணை உணவுகள் கிடைக்கவில்லை. ஆறு மாதங்களுக்கு முழுமையான தாய்ப்பால் கிடைப்பதில் கடந்த 20 ஆண்டுகளாக பெரிய அளவில் மாற்றம் ஏதுமில்லை. 20 % குழந்தைகள் மட்டுமே ஆறு மாதங்களுக் குப் பிறகும் அதிகபட்சம் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் பெறுகின் றனர். மூன்றில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடிப் பணியாளர்களின் சேவையைப் பெறுகின்றனர். 

நான்கில் ஒரு பங்கு குழந்தைகள் மட்டுமே ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத் தின் கீழ் சத்துணவு பெறுகின்றனர். 18 சதவீதம் குழந்தைகள் மட்டுமே அங்கன்வாடி மையங்களில் எடை பார்த்துள்ளனர்.

இந்தியா பாரம்பரியமாகவே தாய்ப்பாலுக்கு சிறப்பான இடம் அளிக்கும் நாடு. ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. தாய்ப்பால் வழங்கும் பெண்களுக்கு சரியான தகவல்கள், வீடு, பணிபுரியும் இடங்களில் உரிய ஏற்பாடு, மகப்பேறு விடுப்பு, குடும்ப உறுப்பினர் களின் ஒத்துழைப்பு இருக்கும்பட்சத்தில் இந்நிலை மேலும் உயரும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. 40.5 சதவீதம் பெண்கள் பிறந்த உட னேயே தாய்ப்பால் வழங்குகின்றனர். 46.8 சதவீதம் பெண்கள் ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் வழங்குகின்றனர். அதிகபட்சமாக 24.4 மாதங்கள் தாய்ப்பால் வழங்கப்படுகிறது. 12.5 சதவீதம் பெண்கள் பாட்டில் பால் கொடுக்கின்றனர். 57.1 சதவீதம் பெண்கள் தாய்ப்பால் தவிர்த்த உணவுகளைக் கொடுக்கின்றனர்.

(WBTI ) மூன்றில் இரண்டு பங்கு குழந்தைகளுக்குக் கூட முழுமையான தாய்ப்பால் (6 மாதங்கள்) வழங்க இயலாத பத்து நாடுகளில் இந்தியா வும் ஒன்று. (தாய்ப்பால் குறித்த சர்வதேச மாநாடு-2012 அறிக்கை யில் யுனிசெப்)

இந்தியாவில் 2010ல் உரிய நாட்களுக்கு முன்னதாகவே 13 சத வீதம் குழந்தைகள் பிறப்பதாகவும் 20% குழந்தைகள் உயரத்திற்கு ஏற்ற எடையில்லாமலும் 47.9 சதவீதம் குழந்தைகள் வயதிற்கேற்ற வளர்ச்சியில்லாமலும் இருப்பதாகவும் கூறுகிறது உலக சுகாதார அறிக்கை-2013. 

சரி, மேற்கண்ட ஆய்விற்கு வருவோம். WBTI ஆய்வில் கொள்கை மற்றும் திட்டங்கள் சார்ந்த 10 அம்சங்களில் 43/100 மதிப் பெண்களும் குழந்தைகளுக்கு உணகூட்டுதல் சார்ந்த 5 அம்சங் களில் 31/50 மதிப்பெண்களும் ஆக மொத்தம் இந்தியா 74/150 மதிப் பெண்கள் பெற்று ஊ கிரேடில் இருக்கிறது. இருந்தபோதிலும் 2005, 2008 ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது 5 மதிப்பெண்கள் அதிக மாகவே பெற்றிருக்கிறது.
இதுவரை போடப்பட்ட ஐந்தாண்டுத் திட்டங்களில் கடந்த 10, 11 மற்றும் 12வது ஐந்தாண்டுத் திட்டங்களில் தான் கர்ப்பிணி பெண்கள் மற்றும் தாய்ப்பால் தொடர்பான விஷயங்களில் மத்திய அரசு கூடுதல் கவனம் செலுத்தியுள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுகாதாரத்திற்காக 1 சதவீதத்தில் இருந்து 2 சதவீதம் ஆக உயர்த்த இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கல்வி, மருத்துவம், பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கு வதில் மத்திய மாநில அரசுகளுக்கு இருக்கின்ற இருக்கின்ற பாய்ச்சல் வேகம் , இதுபோன்ற செயல்பாடுகளில் இருந்தால் மக்கள் நலம் பெறுவர். திறன் மிக்க குடிமக்களாய்த் திகழ்வர். உழைப்பு பெருகும். உற்பத்தி பெருகும். பொருளாதார வளர்ச்சியால் நாடு நலம் பெறும்.! வளம் பெறும்..!

தேனி சுந்தர், விஞ்ஞான சிறகு