Saturday, February 18, 2012

அறிவியல் வானில் பெண் நட்சத்திரங்கள்

 பெண் என்பவர் ஒரு தாய், ஒரு மகள், ஒரு சகோதரி, ஒரு மனைவி. குடும்பம் என்ற அமைப்பின் ஆணிவேராக இருப்பதும் பெண்தான். அதே சமயம், பொது வாழ்க்கையில் ஆண்களோடு இணைந்து பொறியியல், மருத்துவம், கல்வி, அரசியல் போன்ற பல்வேறு துறைகளில் அவர்கள் தங்கள் முத்திரையை அழுத்தமாகப் பதித்தும் வருகின்றனர். தாங்கும் சக்தி அதிகம் தேவைப்படும் மிகக் கடினமான பயிற்சிகள் கொண்ட விண்வெளிப் பயணங்களிலும் கூட அவர்கள் சிறந்த சாதனைகளைச் செய்து வருகின்றனர். 1950-களில் அன்றைய சோவியத் யூனியன் விண் வெளியில் ஸ்புட்னிக் என்ற செயற்கைக் கோளைச் செலுத்திய பிறகு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புது யுகம் பிறந்தது.

 யூரி ககாரின் விண் வெளியில் முதன்முதலாகக் காலடி எடுத்து வைத்து சிறிது காலம் ஆனவுடனேயே வாலெண்டினா டெரஸ் கோவா அந்த சாதனையைத் தொடர்ந்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார். அதற்குப் பிறகு மேலும் பல பெண்கள் விண் வெளியில் பயணிக்க அது ஒரு தொடக்கமாக அமைந்தது. 
 
2011 ஜனவரி நிலவரப்படி 282 விண் வெளிப் பயணங்கள் மூலமாக 520 பேர் விண்வெளிக்குச் சென்று திரும்பி வந்தவர்கள். அதில் ரஷ்யா, அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜப் பான், கொரியா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து சென்ற 56 பேர் பெண்கள். 

இந்தியாவிலும் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமிற்குப் பிறகு ஏவுகணைத் திட்டத்தின் இயக்குநராக பொறுப்பேற்றிருப்பது 48 வயதான டெஸ்ஸி தாமஸ் என்ற பெண்தான். சென்ற ஆண்டு நவம் பர் 15 அன்று ஒரிஸா கடற்கரையின் பாலசோர் சோதனைத்தளத்திலிருந்து அக்னி - ஐஏ ஏவுகணையை விண்ணில் செலுத்தி அவரும் அவரது குழுவினரும் சாதனை படைத்தனர்.

 3000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இலக்கைத் தாக்கி அந்த ஏவுகணை பழைய சாதனை களை முறியடித்தது. இந்தியாவின் பிரபலமான பெண் விஞ்ஞானியாக டெஸ்ஸி தாமஸ் கருதப்படுகிறார். ஆனால் அதை வைத்து அறிவியல் துறையில் பெண்களுக்குரிய அங்கீ காரம் கிடைத்துவிட்டதாக நாம் மகிழ்ச்சியடைந்துவிட முடியாது. எப்படி ஒரு பிரதிபா பாட்டீலையோ ஒரு மீரா குமாரையோ வைத்து அர சியலில் பெண்களுக்குரிய இடம் கிடைத்து விட்டதாகக் கருதமுடிய தோ அது போன்றதுதான் இது.

பெண் விஞ்ஞானிகளில் மேரி கியூரியைப் பற்றி பலருக்கும் தெரியும். அவர்களுக்குக் கூட அவர் இரண்டு முறை நோபல் பரிசு பெற்ற வர் என்ற தகவல் தெரியுமாவெனத் தெரியவில்லை. 1963-ல் இயற்பிய லுக்காக நோபல் பரிசு பெற்ற மரியா கோப்பெர்ட்-மேயர், 1964-ல் வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்ற டோரோதி ஹாட்கின்,1986-ல் மருத்துவத்திற்காக நோபல் பரிசு பெற்ற ரிட்டா லெவி-மாண்டேசினி போன்ற பெண் விஞ்ஞானிகளையோ, பெண் என்ற காரணத்தினா லேயே நோபல் பரிசு பெற வாய்ப் பில்லாமல் போய்விட்ட ரோசலிண்ட் ஃப்ராங்க்ளின் (1920-1958), லைஸே மேட்னர் (1878-1968), சியன்-ஷியுங் வு (1912- 1997), ஜோசலின் பெல் பர்னெல் (1943- ) போன்ற பெண் விஞ்ஞானிகளையோ எத்தனை பேருக்குத் தெரியும்?

பல கலாச்சார, சமூகத் தடைகளின் காரணமாக நாட்டில் பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கலை, சமூக விஞ்ஞானம் போன்ற மென்மையான துறைகளுக்குத்தான் பெண்கள் ஏற்றவர்கள் என்ற கருத்து இன்னமும் பரவலாக இருக் கிறது. அடிப்படையில் பெண்கள் வீட்டுப் பராமரிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என்றே பலரும் எதிர்பார்க்கின்றனர். இது ஆண்களின் எதிர்பார்ப்பு மட்டுமல்ல, பல பெண்கள் தங்களுக்காக வகுத்துக் கொண்டுள்ள எல்லையும் அதுதான்.

பெண் விஞ்ஞானிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பது பற்றி சமூகவியலாளர்கள் பல ஆண்டுகளாகவே கவலை தெரிவித்து வருகின்றனர். மற்ற எல்லாத் துறைகளையும் போலவே அறிவியல் துறையிலும் சமூகத்தின் பார்வைகள், சமூக நிர்ப்பந்தங்கள், பாலினப் பாகுபாடுகள் போன்ற காரணங்களால் பெண்கள் பிரச்சனை களைச் சந்திக்கின்றனர். மனித வளத்தின் கணிசமான பகுதி சரியான முறையில் பயன்படாமலே வீணாவதை நாம் உணர வேண்டும். சமூகம் பெண்களைப் பார்க்கும் பார்வைகளில் அடிப்படையான மாற்றங்கள் வரவேண்டும். பெண்கள் அறிவியல் துறையில் நியமனம் பெறவும் சாதனைகள் படைக்கவும் உள்ள தடைகளை அகற்ற வேண்டியது மிகமிக அவசியம் என்பதில் சந்தேகம் இல்லை.

No comments: