Saturday, June 4, 2011

இளம் பருவத்தில் விஞ்ஞானிகள் எட்வர்ட் ஜென்னர்



இரண்டரை நூற்றாண்டுகளுக்கு முன்பு நடந்தது இது. இங்கிலாந்தில் பெர்க்லி என்றொரு நகரம் இருக்கிறது. அங்கு ஒரு பள்ளி விடுதியில் சில நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியது. எங்கிருந்து இந்த நாற்றம் வருகிறது என்று கண்டுபிடிப்பதற்காக வார்டன் தன் உதவியாளர்களுடன், ஒவ்வொரு அறையாகச் சென்று சோதனை நடத்தினார்.


பல அறைகளை நன்றாக ஆராய்ந்த பின்பும் அவரால் நாற்றத்திற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கடைசியில் எட்வர்ட் என்னும் மாணவனின் அறையை அடைந்தனர்.

""ஓ!... இந்த அறையிலிருந்துதான் கெட்ட நாற்றம் வீசுகிறது!'' என்று சொல்லிக்கொண்டே வார்டன் அங்கிருந்த கட்டிலிலிருந்து படுக்கையை விலக்கினார். அப்போது அவர் அந்தப் படுக்கைக்குக் கீழே கண்டது என்ன தெரியுமா?

பலவிதமான முட்டைகள், வைக்கோல், இறந்த தவளையின் உடல், எலும்புத் துண்டுகள்...இப்படிப் பல பொருட்கள் அங்கு இருந்தன. அவற்றில் பல பொருட்கள் அழுகிநாறின.

வார்டன் மிகவும் கோபம் கொண்டார். அந்த அறையில் தங்கியிருந்த மாணவன் எட்வர்ட் பயந்து நடுங்கி நின்றான்.
   ""என்னடா இதெல்லாம்?'' வார்டன் அதட்டினார்.

தயங்கித் தயங்கி எட்வர்ட் சொன்னான்: ""இயற்கைக் கண்காட்சி ஒன்றை உருவாக்குவதற்கான பொருட்கள் சார்... வார்டன் தன் பணியாளரிடம், ""இதையெல்லாம் அள்ளி உடனே வெளியே போடு!'' என்று உத்தரவிட்டார்.
   
அப்போதுதான் தலைமை ஆசிரியர் அங்கே வந்தார்.


அவர் எட்வர்டின் அருகே சென்று அன்புடன் அவன் முதுகில் தட்டிக்கொடுத்தார். பிறகு வார்டனிடம் சொன்னார்:

 ""இப்பொருட்களையெல்லாம் வெளியே போட்டுவிடாதீர்கள். இதுபோன்ற இன்னும் பல பொருட்களை எட்வர்ட் சேகரிக்கட்டும். அதையெல்லாம் வைத்து நாம் பள்ளியில் இயற்கை அறிவியல் தொடர்பான கண்காட்சி நடத்தலாம்!'


 தலைமை ஆசிரியரின் வார்த்தைகளைக் கேட்டபோது நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தான் எட்வர்ட். சில தினங்களுக்குள் அவன் இன்னும் நிறையப் பொருட்களைச் சேகரித்து பள்ளியில் ஒரு பெரிய கண்காட்சி நடத்தினான்.

குழந்தைப் பருவத்தில் இயற்கையை ஆராய்வதில் பெரிதும் ஆர்வம் காட்டிய அந்த மாணவன் பிற்காலத்தில் பெரிய விஞ்ஞானியாக மாறினான். அது யார் தெரியுமா? விஞ்ஞானி எட்வர்ட் ஜென்னர்.


எட்வர்ட் ஜென்னர் 1749 - ஆம் ஆண்டு, மே 17 - ஆம் நாள் இங்கிலாந்தில் உள்ள பெர்க்லியில் பிறந்தார். கல்வி கற்று மருத்துவரானார். பெரியம்மை நோய்க்கு மருந்து (வாக்ஸின்) கண்டுபிடித்து புகழ் பெற்றார். 1823 - ஆம் ஆண்டு, ஜனவரி 26 - ஆம் நாள் மறைந்தார்.

No comments: